நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விந்தையான கட்டுமானங்கள், நுணுக்கங்கள், தொழிற்நுட்பங்கள், கட்டுமானத்துறை தொடர்பான செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள் போன்றவற்றை தனக்கே உரிய எளிய நடையில் தொகுத்தளிதிருக்கிறார் இந்நூலாசிரியர் திரு.பா.சுப்ரமண்யம். இந்நூலை ஒரே மூச்சில் ஒரே நாளில் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பயணத்தின்போதோ, ஓய்வின்போதோ படிக்கக் கூடிய வகையில் தனித்தனி செய்திகளாக, துணுக்குகளாக, சின்னஞ்சிறு கட்டுரைகளாக என பல வடிவில் பல பரிமாணத்தில் தகவல் கோர்வையாக இந்நூல் விளங்குகிறது. கட்டிடத்துறை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையுடன் வளர்ந்து வருகிறது. நீரில் கட்டிடம், மலை உச்சியில் கட்டிடம், ஆட்டோமேட்டிக் ரோபோ, முப்பது நாளில் முப்பது மாடிக் கட்டிடம், கார்பனே இல்லாத கட்டிடம், குப்பைகள் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம், ஒரு கிலோ மீட்டர் உயரக் கட்டிடம் போன்ற பலப்பல விந்தைகளை சத்தமில்லாமல் செய்து வருவதுதான் கட்டிக்கலை. எனவே, அதுபோன்ற கட்டிடத்துறை தொடர்பான தகவல்களையும் செய்திகளையும் ஆவணப்படுத்துவதே இந்நூலின் நோக்கம். சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும், நகரங்களிலும், ஏன் தமிழ்நாட்டிலும் கூட வியாபித்திருக்கும் விந்தைக் கட்டிடக்கலையை சின்னஞ்சிறு துணுக்குகளாக அள்ளித் தெளித்திருக்கிறார் இந்நூல் ஆசிரியரும் கட்டிடத்துறை முதன்மை மாத இதழான பில்டர்ஸ்லைன் ஆசிரியருமான பா.சுப்ரமண்யம். பிரம்மிப்பூட்டும் கட்டுமானத்துறை தொடர்பான புதிய தகவல்களை சுவைப்பட சொல்லி இருக்கும் ஆசிரியரின் இப்படைப்பு மெச்சுதலுக்கு உரியது. கட்டிடவியல் தொழிற்நுட்பங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், விந்தையான செய்திகளை அரிய முற்படுபவர்களுக்கும் இந்நூல் நல்ல தேர்வாக இருக்கும்.